டில்லி பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) இன்று விமான நிலையத்தில் நிருபர்களை சந்திப்பதை தவிர்த்தார். கேள்விகள் எழுப்பப்பட்டபோது, “நாளை பார்த்துக் கொள்ளலாம்” என்று ஒரே வரியில் பதிலளித்து அங்கிருந்து புறப்பட்டார்.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ, பாமக, தமாகா, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுக இதுவரை குழு அமைக்காததால் கூட்டணி கட்சிகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இபிஎஸ் தொகுதி பங்கீடு குறித்து பேசியதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றும் செய்தி தெரிவிக்கிறது.

இந்த சூழலில் இபிஎஸ் திடீரென டில்லி சென்றுள்ளதால் கவனம் திரும்பியுள்ளது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன. விமான நிலையத்தில் நிருபர்களை சந்திக்காமல் சென்றது, தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.