டெஹ்ரானில், ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இருப்பதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. யுரேனியம் செறிவூட்டலுக்காக இந்த நிலையம் பயன்படுத்தப்படுவதாக ஈரான் கூறினாலும், அணுஆயுதத் தயாரிப்புடன் தொடர்பு இருப்பதாக மேற்கத்திய நாடுகள் முன்பே கூறி வந்தன.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல்–அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளதாகவும், அந்த தாக்குதல்களில் கமேனி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

பன்னாட்டு அணுசக்தி முகமையகத்துக்கான (IAEA) ஈரான் தூதர் ரெசா நஜாபி, அமைதிப் பயன்பாட்டுக்கானதும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளதுமான நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக முகமையகத்திடம் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஐஏஇஏ தலைவர் ரபேல் குரோஸி, மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை மிகவும் கவலையளிப்பதாக கூறி, அனைவரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஈரானின் அணுசக்தி அமைப்புகள் தாக்கப்பட்டதாகவோ அல்லது சேதமடைந்ததாகவோ உறுதி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் கோரிக்கையின்படி கூடிய அவசர கூட்டத்தில் பேசிய குரோஸி, அந்தப் பகுதியில் அணுசக்தி நிலையங்கள், அணு ஆராய்ச்சி அமைப்புகள், எரிபொருள் சேமிப்பு இடங்கள் இருப்பதால் அணுசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கிறது என்றார். மேலும், அணு மற்றும் கதிர்வீச்சுப் பொருட்கள் உள்ள இடங்கள் குறித்து முகமையகம் அறிந்துள்ளதாகவும், தாக்குதல் அல்லது விபத்து ஏற்பட்டால் உடனடி நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெரிய நகரங்களில் மக்கள் வெளியேற்றம் தேவைப்படும் அளவுக்கு மோசமான விளைவுகளுடன் கூடிய சாத்தியமான கதிரியக்க வீச்சை மறுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.