மஹாராஷ்டிராவில் திருமண தகவல் இணையதளத்தின் மூலம் ‘இஸ்ரோ’ விஞ்ஞானி என தன்னை அறிமுகப்படுத்தி, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புனே வக்காட் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண், 2024-ல் பிரபல திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். சில மாதங்களில் அலிபாக் பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் பெயர் ‘ஜெயேஷ் பாட்டீல்’ என்றும், இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிவதாகவும் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, பல்வேறு காரணங்களை முன்வைத்து சிறு சிறு தொகைகளாக பணம் பெற்றதாகவும், அது திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கைக்கான சேமிப்பு என நம்ப வைத்ததாகவும் கூறப்படுகிறது. 2024 நவம்பர் முதல் 2025 ஜனவரி வரை பல்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.43 லட்சம் வழங்கியதாகவும், சில நேரங்களில் நேரிலும் சந்தித்ததாகவும் பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் இஸ்ரோ விஞ்ஞானி அல்ல என்பது தெரிய வந்ததையடுத்து, பெண் வக்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் பேரில் தலைமறைவாக இருந்த குற்றச்சாட்டுக்குரியவர் ஆதர்ஷ் மாத்ரே என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து ரூ.16.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மீதித் தொகையை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மோசடி பணத்தில் கோவா சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.




