தமிழகத்திற்கு சொந்தமான 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலை, பிரிட்டன் அதிகாரிகளால் இந்தியாவுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், இந்தச் சிலை தஞ்சாவூர் மாவட்டம் தடிகொம்பு ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து மாயமானதாக கண்டறியப்பட்டது. 1967ஆம் ஆண்டு சோத்பீஸ் ஏலத்தில் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் இதை வாங்கியிருந்தது.

2019ஆம் ஆண்டு ஒரு ஆய்வாளர் வெளியிட்ட 1957ஆம் ஆண்டு கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மூலம், இது திருடப்பட்ட சிலை என்பதும், அதற்கு பதிலாக நவீன நகல் ஒன்று வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், சிலை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.

இந்தியத் தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சிலையை ஒப்படைப்பதாக பிரிட்டன் தரப்பு தெரிவித்தது. இந்திய கலாசார அமைச்சகத்தின் ஒப்புதலுடன் பரிமாற்ற ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் வைத்து சிலை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சிலை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு, பாரம்பரிய சடங்குகளுக்குப் பிறகு மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் என கூறப்பட்டது. மேலும், இந்திய அரசு உதவியுடன் மீட்கப்பட்ட குடையுடன் அமர்ந்த விநாயகர், நடனமாடும் விநாயகர் மற்றும் நடனமாடும் குழந்தை பாலகிருஷ்ணர் உள்ளிட்ட மேலும் நான்கு பழங்கால சிலைகளும் இந்த நிகழ்வில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.