துபாய்: மேற்காசியப் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், துபாய்க்கு வரும் மற்றும் துபாயில் இருந்து புறப்படும் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்த எமிரேட்ஸ், பிற்பகல் முதல் மீண்டும் சேவையை தொடங்குவதாக சனிக்கிழமை அறிவித்தது.

பாதுகாப்பு நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து வருகை-புறப்பாடு விமானங்களும் ரத்து என நிறுவனம் முதலில் தெரிவித்திருந்தது. இதற்கு பின்னணியாக, துபாயில் சில இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடந்ததாகவும், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே டிரோன் தாக்குதல் நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியானது.

அந்த தாக்குதலால் விமான நிலையத்திற்கு சேதம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. பின்னர் வெளியிட்ட புதுப்பிப்பு அறிவிப்பில், முன்பதிவு செய்த பயணிகள் பிற்பகல் முதல் விமான நிலையத்திற்கு வரலாம் என எமிரேட்ஸ் தெரிவித்தது.

துபாய் வழியாக இணைப்பு விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள், அடுத்த இணைப்பு விமானம் இயக்கப்படும் நிலையில் மட்டுமே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றும், புறப்படும் முன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விமான நிலையை சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் எமிரேட்ஸ் தெரிவித்தது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்றும் கூறப்பட்டது. இதே நேரத்தில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக துபாய் சர்வதேச விமான நிலைய செயல்பாடுகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியதாக விமான நிலைய நிர்வாகமும் அறிவித்துள்ளது.