சென்னை: திமுக அரசின் சாதனைகள் பிற மாநிலங்கள் தமிழகத்தை முன்மாதிரியாகப் பார்க்கும் அளவுக்கு வழிகாட்டியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அறிக்கையில், 2021 மார்ச் 7 அன்று திருச்சி அருகே சிறுகனூரில் கட்சியினரை சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர், வரும் மார்ச் 9 அன்று அதே இடத்தில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையவுள்ளதாக கூறினார். தமிழகத்தில் 11.19% என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பதிவானதாகவும், அது மத்திய அரசால் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு வந்ததாக கூறிய ஸ்டாலின், அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை வேகப்படுத்த மேலும் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றார்.

அடுத்த கட்டத்தை ‘திராவிட மாடல் 2.0’ என குறிப்பிட்ட அவர், தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கி, உலகத் தரத்துடன் போட்டியிடக்கூடிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். சிறுகனூர் மாநாட்டில் ‘வரலாற்று வெற்றி’ பெற கட்சியினரை அவர் அழைத்தார்.