லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போர் உலகளவில் பெரிய நிதி இழப்பை உருவாக்கி, இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தார்.

பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மோதல் உலக அளவில் மாற்றங்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி வருவதாக கூறினார். பங்குச் சந்தை வீழ்ச்சி போன்றவை அதன் தாக்கத்தின் ஆரம்ப அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடி தீவிரமடைந்தால் இந்தியா “பெரிய அடியை” சந்திக்க நேரிடும் என்றும், பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சேதத்தை எதிர்கொள்ளலாம் என்றும் ராகுல் தெரிவித்தார். மேலும், மேற்கு ஆசிய நிலவரம் இந்தியாவில் எரிபொருள் விலைகளை கடுமையாக பாதிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த அரசு விரும்பவில்லை என்று கூறிய ராகுல், எரிபொருள் விலை மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போன்றவை பொதுமக்கள் தொடர்பான முக்கிய விஷயங்கள் என்பதால் அவற்றை விவாதிக்க வேண்டும் என்றார். பிரதமர் இந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.