திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கேரளாவிலிருந்து மாலை 4 மணியளவில் திருச்சி வந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஹெலிகாப்டரில் பஞ்சப்பூருக்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முக்கியமாக, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.3,680 கோடி முதலீட்டு திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சென்னை அருகே மணலியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட மசகு எண்ணெய் கலவை ஆலையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை அவர் திறந்து வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை 81-ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.

இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணியர் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை 6:30 மணிக்கு திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேச உள்ளார்.