புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் (சிஇசி) ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மான நோட்டீசில், எதிர்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணி, மத்தியில் ஆளும் பா.ஜ.க.க்கு ஆதரவாக தலைமை தேர்தல் கமிஷனர் செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்” என்ற பெயரில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தகுதியான பல வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரசும், அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கையின்படி, லோக்சபாவில் 120 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 60 எம்.பி.க்களும் இந்த நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நோட்டீசுகளை இரு சபைகளிலும் விரைவில் சமர்ப்பிக்க ‘இண்டி’ கூட்டணி முடிவு செய்துள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க நோட்டீஸ் அளிக்கப்படுவது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும், இரு சபைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த முயற்சி தோல்வியடையும் வாய்ப்பே அதிகம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.