புதுடில்லி: எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா புதன்கிழமை மீண்டும் தனது பணிகளைத் தொடங்கி, அவையில் தனது நடவடிக்கைகள் பாரபட்சமற்றவை என தெரிவித்தார்.
சில உறுப்பினர்கள் லோக்சபாவுக்கு மேல் இருப்பதாகவும், எந்த விஷயத்திலும் பேச முடியும் எனவும் கருதுவதாக அவர் கூறினார். ஆனால், அத்தகைய சிறப்பு சலுகை யாருக்கும் இல்லை என்றும், சபை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலேயே செயல்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.
பிரதமரும் அமைச்சர்களும் கூட அவையில் அறிவிப்புகளை வெளியிட விதிகளின்படி முன் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும், மைக்ரோபோன்களை இயக்கவும் அணைக்கவும் சபாநாயகரிடம் தனிப்பட்ட ‘பொத்தான்’ இல்லை என்றார்.
பேச அனுமதி வழங்கப்பட்ட உறுப்பினருக்கே மைக்ரோபோன் இயக்கப்படும் என்றும், விதிகளுக்குள் ஒவ்வொரு எம்.பி.யும் பேசும் வாய்ப்பு பெற தொடர்ந்து முயற்சி செய்கிறேன் என்றும் ஓம் பிர்லா தெரிவித்தார். சுதந்திர இந்தியா வரலாற்றில் மூன்றாவது முறையாக லோக்சபா நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதித்ததாகவும் அவர் கூறினார்.




