அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரை தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான அடோபின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சாந்தனு நாராயண், 18 ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் 2007ஆம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

அவரது தலைமையில், அடோப் வெறும் மென்பொருள் நிறுவனமாக மட்டுமின்றி ‘கிளவுட்’ மற்றும் ‘ஏ.ஐ.’ தொழில்நுட்ப தளங்களில் உலகளாவிய அளவில் வலுப்பெற்றதாக கூறப்படுகிறது. அவர் பொறுப்பேற்ற காலத்துடன் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்ந்து சுமார் 24 பில்லியன் டாலரை எட்டியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், ஒருமுறை வாங்கும் மென்பொருள் முறைமையிலிருந்து மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்தும் (recurring) முறைமைக்கு மாற்றத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியவர் என்ற பெயரும் அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ கருவிகள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் நிறுவனத்தின் திசை குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றக் கட்டத்தில் நிறுவனத்தின் அடுத்த அத்தியாயத்திற்கான சரியான தலைவரைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக அடோப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய சிஇஓ தேர்வு செய்யப்படும் வரை சாந்தனு நாராயண் பதவியில் தொடர்வார் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.