புதுடில்லி: 2025 நவம்பரில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பித்த செலவு அறிக்கைகள், பா.ஜ. மற்றும் காங்கிரஸ் இடையே செலவீடு–வெற்றி விகிதத்தில் பெரிய வேறுபாட்டை காட்டுகின்றன.
முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) உடன் கூட்டணி அமைத்து பா.ஜ. 101 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வென்றது; ஜே.டி.யு. 85 இடங்களில் வென்றது. நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்ற நிலையில், பா.ஜ.வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா துணை முதல்வர்களாக பதவியேற்றனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அறிக்கைகளின்படி, பா.ஜ. தேர்தலில் ரூ.146.71 கோடி செலவிட்டுள்ளது; காங்கிரஸ் ரூ.35.07 கோடி செலவிட்டுள்ளது. தொகை ரீதியில் பா.ஜ. அதிகம் செலவிட்டாலும், அதன் மொத்த நிதி இருப்பான ரூ.7,235.26 கோடியில் இது சுமார் 2% மட்டுமே; தற்போது அக்கட்சியிடம் ரூ.7,088.58 கோடி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தனது மொத்த நிதி இருப்பான ரூ.124.2 கோடியில் சுமார் 28% செலவிட்டதாகவும், தற்போது ரூ.89.13 கோடி மட்டுமே மீதமுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற இடங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், பா.ஜ. வெற்றி பெற்ற ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்கும் சராசரியாக ரூ.1.64 கோடி செலவிட்டதாகவும், காங்கிரஸுக்கு அது ரூ.5.83 கோடி என்ற அளவிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பா.ஜ. செலவீட்டில் ரூ.117 கோடி நட்சத்திர பேச்சாளர்களின் பயணம் மற்றும் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், டிஜிட்டல் பிரசாரத்துக்காக ‘கூகுள் இந்தியா’ நிறுவனத்திற்கு ரூ.14.27 கோடி வழங்கப்பட்டதாகவும், வேட்பாளர்களுக்கு நேரடியாக ரூ.29.71 கோடி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் செலவில் நட்சத்திர பேச்சாளர்களின் பயணத்திற்கு ரூ.12.83 கோடி, சமூக ஊடக பிரசாரத்திற்கு ரூ.11.24 கோடி செலவிட்டதாகவும், ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ தொடர்பான செலவுகளும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) மற்றும் ஜே.டி.யு. இன்னும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.




