ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரிய படுகொலையை நிகழ்த்திவிட்டு அதை ராணுவ நடவடிக்கையாக காட்ட பாகிஸ்தான் முயல்வதாகவும் அமைச்சகம் குற்றம்சாட்டியது.
வெளியுறவுத்துறை அறிக்கையில், இந்த தாக்குதல் “மிருகத்தனமான படுகொலை” என்றும், கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறைச் செயல் என்றும் குறிப்பிடப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தை எந்த வகையிலும் ராணுவ இலக்காக நியாயப்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டது.
மேலும், இது ஆப்கானிஸ்தானின் இறையாண்மைக்கு எதிரான அப்பட்டமான தாக்குதல்; பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என இந்தியா தெரிவித்தது. எல்லைக்கு அப்பால் வன்முறையைத் தூண்டி, உள்நாட்டு தோல்விகளை மறைக்க பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் முயல்கிறது என்றும் அறிக்கையில் குற்றச்சாட்டு இடம்பெற்றது.
மருத்துவமனையையும் அதன் நோயாளிகளையும் வேண்டுமென்றே குறிவைப்பதை எந்த நம்பிக்கையோ, சட்டமோ அல்லது அறநெறியோ நியாயப்படுத்த முடியாது என்றும் வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.
தகவலின்படி, டிடிபி (TTP) விவகாரத்தைச் சுற்றி சமீப நாட்களாக பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நிலவி வருகிறது; இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானில் தாக்குதல்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. காபூல் மருத்துவமனை தாக்குதலில் 250 பேர் காயமடைந்ததாகவும், முதலில் மறுத்த பாகிஸ்தான் பின்னர் ஒப்புக்கொண்டதாகவும், தாக்குதலுக்குப் பிறகு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறி தனது செயலை நியாயப்படுத்த முயன்றதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




