ஜெருசலேம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.
இந்த தகவல்கள் பரவியபோதும், நெதன்யாகு உயிருடன் நலமாக இருப்பதாக பிரதமர் அலுவலகம் தொடர்ந்து தெரிவித்து வந்ததாக செய்திகள் கூறுகின்றன.
வதந்திகளை மறுப்பதற்காக, பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் காபி அருந்தியபடி நெதன்யாகு பேசும் காட்சிகள் கொண்ட வீடியோ முன்பே வெளியிடப்பட்டது. ஆனால் அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாக சிலர் கூறியதால் சந்தேகங்கள் தொடர்ந்தன.
இதையடுத்து திங்களன்று மேலும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு, அதில் நெதன்யாகு ஈரான் மக்களுக்கு நவ்ரூஸ் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார். நவ்ரூஸ் என்பது வசந்த கால வருகையையும் புத்தாண்டு தொடக்கத்தையும் குறிக்கும் பழமையான திருவிழாவாகும்.
அந்த செய்தியில், விடுமுறை காலம் மகிழ்ச்சியாக அமைய வாழ்த்திய அவர், இருளை வென்று ஒளி வெல்லும்; தீமையை வென்று நன்மை வெல்லும் என்ற கருத்தை கூறி, குடும்பத்தினருடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.




