புதுடில்லி: விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, ஒரு விமானத்தில் உள்ள 60% இருக்கைகளுக்கு தனியாக ‘சீட் தேர்வு’ கட்டணம் வசூலிக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. மேலும், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே முன்பதிவு எண்ணில் பதிவு செய்யப்படும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்றும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. அதேபோல், விமானப் பயணம் தொடர்பான தகவல்களை பயணிகளின் தாய் மொழியில் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம். பல விமான நிறுவனங்கள் டிக்கெட் வாங்கிய பிறகோ அல்லது ஆன்லைன் செக்-இன் நேரத்திலோ ஜன்னலோரம், முன்பக்கம் போன்ற விருப்ப இருக்கைகளுக்காக கூடுதல் கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இந்த உத்தரவு பயணிகளுக்கு நியாயமான விலையில் பயணத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.