வாஷிங்டன்: ஈரான் மீது நடத்தப்படும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) தலைவர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு விலக முடிவு செய்ததாகவும், ஈரானுக்கு எதிரான போருக்கு தன்னால் சிறந்த முறையில் ஆதரவு அளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஈரான் தற்போது அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள சக்திவாய்ந்த குழுக்களின் அழுத்தம் காரணமாகவே இந்த போர் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், டிரம்பின் வெளியுறவு கொள்கைகளைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட ஜோ கென்ட், டிரம்பின் முதல் ஆட்சிக்காலத்தில் ராணுவ வல்லமையைத் தீர்க்கமாகப் பயன்படுத்திய விதத்தைப் பாராட்டினார். காசிம் சுலைமானி கொலை மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை தோற்கடித்ததை எடுத்துக்காட்டாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ஜோ கென்ட் ராஜினாமா செய்தது “நல்ல விஷயம்” என்றும், பாதுகாப்பு விவகாரங்களில் அவர் பலவீனமான அதிகாரி என்றும் கூறி, அத்தகைய நபர்கள் தேவையில்லை என தெரிவித்தார்.




