புதுடில்லி: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) வெளியிட்ட ஆய்வில், ராஜ்யசபா எம்.பி.க்களில் 32% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், 14% பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவின் மொத்த 233 உறுப்பினர்களில் 229 பேர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததாக ஏ.டி.ஆர். கூறியது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒரு இடம் காலியாக இருப்பதாகவும், மூன்று எம்.பி.க்களின் பிரமாணப் பத்திரங்கள் ஆய்வுக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. சமீபத்தில் தேர்வான 37 எம்.பி.க்களின் பிரமாணப் பத்திரங்களும் இதில் சேர்க்கப்பட்டன.
ஆய்வு செய்யப்பட்ட 229 எம்.பி.க்களில் 73 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவர்களில் 36 பேர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது. ஒரு எம்.பி. தன் மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், நான்கு எம்.பி.க்கள் மீது கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் மூன்று எம்.பி.க்கள் மீது நிலுவையில் இருப்பதாகவும் ஏ.டி.ஆர். சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சி வாரியாக பா.ஜ.க.வில் 27 பேர், காங்கிரசில் 12 பேர், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளில் தலா நான்கு பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சிகளில் தலா மூன்று பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
சொத்து விவரங்களில், 31 எம்.பி.க்கள் (14%) ரூ.100 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளனர். ராஜ்யசபா எம்.பி.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.120.69 கோடி எனவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களின் சராசரி சொத்து ரூ.522.63 கோடி என அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.ஆர்.எஸ். எம்.பி. பண்டி பார்த்தசாரதி ரூ.5,300 கோடிக்கு மேல் சொத்து அறிவித்துள்ளதால் அதிக சொத்து கொண்டவராக குறிப்பிடப்பட்டுள்ளார்.




