டெஹ்ரான்: ஈரானில், தேசிய மல்யுத்த அணியில் இடம் பெற்றதாக கூறப்படும் 19 வயது இளைஞர் உட்பட மூன்று பேரை, பொதுமக்கள் முன்னிலையில் அந்நாட்டு நீதித்துறை தூக்கிலிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் சூழல் உருவாகும் முன்பே, பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஈரானில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களை அடக்குவதில் பலர் உயிரிழந்ததாகவும், பல நாடுகள் இதை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது தெரிய வந்த தகவலின்படி, கடந்த ஜனவரியில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஒருவர் 19 வயதான சலே முகமதி.

சலே முகமதி சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற இளம் மல்யுத்த வீரர் என தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவில் நடந்த ‘ப்ரீஸ்டைல்’ மல்யுத்த போட்டியிலும் அவர் பதக்கம் பெற்றதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்றதற்காகவும் அவர் தண்டிக்கப்பட்டதாக தகவல்.

‘கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டின் கீழ், பொது இடத்தில் வைத்து மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறையின் தொடர்ச்சி என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.