கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் உள்ள அமேசான் வனப்பகுதியில், பெரு எல்லை அருகே ராணுவ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளானது லாக்கீட் மார்டின் சி-130 ஹெர்குலஸ் ரக விமானம் என கூறப்படுகிறது. அந்த விமானத்தில் 110 ராணுவ வீரர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்ததை பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி செய்துள்ள நிலையில், உயிரிழப்பு ஏற்பட்டதா மற்றும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் இல்லை. தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அதிபர் குஸ்டாவோ பெட்ரோ கவலை தெரிவித்ததுடன், உயிரிழப்பு எதுவும் இருக்காது என நம்புவதாக கூறினார். சி-130 ஹெர்குலஸ் விமானம் 1960-களிலிருந்து கொலம்பிய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு அண்டை நாடான பொலிவியாவில் சி-130 விமானம் விபத்துக்குள்ளாகி 20 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




