புதுடில்லி: கொல்கட்டா மெட்ரோ வழித்தட கட்டுமானப் பணிகளில் தேவையற்ற தடைகள் ஏற்படுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்களன்று கடும் கண்டனம் தெரிவித்தது. பொதுமக்களுக்கு பயனளிக்கும் வளர்ச்சித் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் அமர்வு வலியுறுத்தியது.

இந்த வழக்கு, சால்ட் லேக் பகுதியிலுள்ள செக்டார் 5-ஐ தெற்கு கொல்கட்டாவுடன் இணைக்கும் மெட்ரோ வழித்தட கட்டுமானத்தைச் சார்ந்தது. ‘சிங்ரிகாட்டா’ சந்திப்பில் நீண்ட காலமாக முட்டுக்கட்டை நிலவுவதாகக் கூறி, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், தாமதம் குறித்து கவலை தெரிவித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று பிப்ரவரி 15க்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டதுடன், கட்டுமானத்திற்காக சாலைகளை அடைக்கவும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மாநில அரசு, சாலைகள் அடைக்கப்பட்டால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் செல்ல முடியாது எனக் கூறி, மே மாதம் வரை அவகாசம் கோரியது.

தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நடந்த விசாரணையில், தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பள்ளி பொதுத் தேர்வுகள் காரணமாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதாக மாநில அரசு தரப்பு தெரிவித்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவு வந்ததிலிருந்து அதை நிறைவேற்ற மாநில அரசுக்கு என்ன தடையாக இருந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தகுந்த வழக்கு இது எனக் குறிப்பிட்டனர்; மேலும், நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் வளர்ச்சித் திட்டத்திற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

இறுதியாக, மாநில அரசின் மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடைவதை உறுதி செய்வதாக கூறியது. கட்டுமானப் பணிகளை கொல்கட்டா உயர் நீதிமன்றமே தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டது.