மேற்காசிய மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிதிச் சுமையை குறைக்கும் நோக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
அறிக்கையின்படி, பிப். 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதையடுத்து, கடந்த நான்கு வாரங்களாக நீடிக்கும் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு செலவு அழுத்தம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 இலிருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி ரூ.10 இலிருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டதால், டீசலுக்கு கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த வரிக் குறைப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், ஆனால் பெட்ரோல்-டீசல் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பும், 74 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பும் உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




