வாஷிங்டன்: ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் மறுபுறம் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் ஈரான் நோக்கி நகர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி, தரைவழி நடவடிக்கைக்கான வாய்ப்பு குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவின் அடுத்த கட்ட திட்டத்தை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படும் ஈரான், கார்க் தீவை பாதுகாப்பு கோட்டையாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவைச் சுற்றி கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் ராணுவ வீரர்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் குவிக்கப்பட்டுள்ளன.

எல்லை மீறல் நடந்தால், அந்தப் பிராந்திய நாட்டின் உட்கட்டமைப்புகள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகளுடன் நடந்த உரையாடல்களை மேற்கோள் காட்டி வெளியான ‘ஆக்சியோஸ்’ அறிக்கையின்படி, நான்கு சாத்தியமான போர் சூழல்கள் பேசப்படுகின்றன: ஈரானின் பொருளாதார வாழ்வாதாரமாகக் கருதப்படும் கார்க் தீவை கைப்பற்றுவது, ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாட்டை தீர்மானிக்கும் லாரக் தீவை பிடிப்பது, ஜலசந்தி நுழைவாயிலில் உள்ள அபு மூசா மற்றும் அருகிலுள்ள இரண்டு சிறிய தீவுகளை கைப்பற்றுவது, மேலும் அணுசக்தி நிலையங்களில் உள்ள அணு பொருட்களை பாதுகாக்க ஈரானுக்குள் ஊடுருவுவது.