முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஒரே நோக்கம் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதே என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சென்னையில் ஆர்.கே.நகர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஆர்.கே.நகர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி என நினைவூட்டினார். மெட்ரோ ரயில், கலை-அறிவியல் கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் அந்தத் தொகுதிக்கு வழங்கப்பட்டதாக கூறிய அவர், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என வாக்குறுதி அளித்தார்.

தி.மு.க.வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட ஒரே குடும்பத்தினர் மட்டுமே கட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க முடியும் என அவர் விமர்சித்தார். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் கூட்டணி; தி.மு.க. கூட்டணி வெற்றுக் கூட்டணி என்றும் கூறினார்.

ஜெயலலிதா மறைந்த பின் அ.தி.மு.க. உடைந்து விடும் என நினைத்து வழக்குகள் மூலம் முடக்கவும், ‘பி’ டீம் உருவாக்கவும் முயன்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவுடன் எதிர்ப்புகளை தகர்த்து கட்சி வலிமையான இயக்கம் என்பதை நிரூபித்ததாக கூறினார். மேலும் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமையெனவும், அமித் ஷா தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததாகவும் பழனிசாமி தெரிவித்தார்.