தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 16 முதல் 18 வரை பார்லிமென்ட் கூட்டத்தொடரை கூட்டும் மத்திய அரசின் முடிவை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

தனது அறிக்கையில், தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார். லோக்சபாவில் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்பிக்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 28 எம்பிக்களும் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதாகவும், ஏப்ரல் 16-18 நாட்களில் அவர்கள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அந்த நாட்களில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கும் வாக்கெடுப்பிற்கும் வந்தால், இந்த 67 எம்பிக்கள் எவ்வாறு பங்கேற்று வாக்களிப்பார்கள் என்று சிதம்பரம் கேள்வி எழுப்பினார். அவர்களை பார்லிமென்ட் நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைப்பதே உள்நோக்கம் என சந்தேகம் தெரிவித்தார்.

மேலும், லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்தும் முன்மொழிவை அவர் விமர்சித்து, இது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கும் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தென் மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் பெருக்கும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என கூறினார்.

ஏப்ரல் 16-18 கூட்டத்தொடர் முடிவை மல்லிகார்ஜுன் கார்கே எதிர்த்ததுடன், மாற்றாக ஏப்ரல் 29-ம் தேதியை பரிந்துரைத்துள்ளதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார். ஏப்ரல் 16-ம் தேதியே கூட்டத்தை நடத்த இவ்வளவு அவசரம் ஏன், ஏப்ரல் 29-ல் நடத்த முடியாத காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.