நக்சல் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபட்டுவிட்டதாகவும், 2026 மார்ச் 31க்குள் நக்சலிசத்தை ஒழிப்பது என்ற மத்திய அரசின் இலக்கு எட்டப்பட்டுவிட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்டில் தெரிவித்தார். இதன் மூலம் பல ஆண்டுகளாக நடந்த தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறையும் என்ற நம்பிக்கை உருவாகிறது.
நக்சல் இயக்கம் 1967ல் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் தொடங்கிய ஆயுதப் போராட்டத்திலிருந்து உருவானது. பின்னர் சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அதன் ஆதிக்கம் பரவியது.
இந்த பகுதிகளில் வசித்த பழங்குடியினர் உள்ளிட்ட பலரும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சி திட்டங்கள், தரமான கல்வி போன்றவற்றை பெற முடியாமல் நீண்ட காலம் பாதிக்கப்பட்டனர். ஆனால் மத்திய–மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் விளிம்பு நிலை மக்களை சென்றடைந்ததாலும், சாலை மற்றும் தகவல் தொடர்பு போன்ற உள்ளகட்டமைப்பு வசதிகள் மேம்பட்டதாலும், சமூக–பொருளாதார முன்னேற்றம் தொடங்கியுள்ளதாக கட்டுரை குறிப்பிடுகிறது.
மேலும் பாதுகாப்புப் படையினரின் திறமையான நடவடிக்கைகள் நக்சல் வன்முறையை கடுமையாகக் கட்டுப்படுத்தியதால், அது இனி அமைப்பு ரீதியான கிளர்ச்சி இயக்கமாக செயல்படுவது கடினம் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நில அபகரிப்பு, சுரண்டல், அரசியல் மற்றும் நலத்திட்ட சலுகைகள் அனைவருக்கும் சமமாக சென்றடையாத இடைவெளிகள் இன்னும் நீடிப்பதால், நக்சலிசம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று இப்போதே கூற முடியாது என்ற எச்சரிக்கையும் இடம் பெறுகிறது.
மீண்டும் எழுச்சி வராமல் தடுப்பதற்கு, முன்னாள் ஆதிக்கப் பகுதிகளில் வளர்ச்சி உண்மையாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் அமைய வேண்டும்; சிலரின் ஆதிக்கம் தொடரும் சூழல் முடிவுக்கு வர வேண்டும் என கட்டுரை வலியுறுத்துகிறது. மேலும் சில தலைவர்கள் சரணடைந்தாலும் சிலர் தலைமறைவாக இருப்பதால், அவர்கள் மீண்டும் ஒன்று திரள வாய்ப்பு இருப்பதாகக் கூறி, இன்னும் சில ஆண்டுகள் மத்திய அரசு கண்காணிப்பை தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.




