புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் மக்களை “ஆச்சர்யப்படுத்தும்” என பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்தார். தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில், அண்ணாமலை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதாகவும், சமீபத்தில் பிரசாரத்திலும் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். கட்சிக்குள் அதிருப்தி இல்லை; ஒருமித்தமாக தேர்தலை எதிர்கொள்கிறோம் எனவும் கூறினார்.
தமிழகத்தில் என்டிஏ கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி என்றும், கூட்டணிக் கட்சிகளை மரியாதையுடன் ஒன்றிணைத்து ‘என்டிஏ’ பெயரில் பாஜ போட்டியிடுகிறது என்றும் நிதின் நபின் தெரிவித்தார். மாநிலத்தில் பாஜ 27 இடங்களில் போட்டியிடுகிறது என்றும் அவர் கூறினார்.
திமுகவின் ஊழல் மற்றும் அவர் “திருப்திபடுத்தும் அரசியல்” என குறிப்பிட்ட செயல்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும், தமிழகத்தில் மாற்றம் வருவதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைக் கொண்டு வளர்ச்சியை பார்க்கவில்லை என்றும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நலத்திட்டங்கள் பாகுபாடின்றி செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார். கேரளாவில் காங்கிரஸ்-இடதுசாரிகள் குறித்து “மேட்ச்-பிக்சிங்” என விமர்சித்த அவர், சபரிமலை விவகாரத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளாரா எனவும் கேள்வி எழுப்பினார்.




