ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு எதிரான வருமானத்துக்கு அதிக சொத்து குவிப்பு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது.

2019 மற்றும் 2024 லோக்சபா தேர்தல்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில் ராமநாதபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நவாஸ்கனி. இரண்டு தேர்தல்களிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஒப்பிட்டால், வருமானத்தை மீறி ரூ.23.58 கோடி அளவில் சொத்து சேர்த்துள்ளதாக வழக்கறிஞர் வெங்கடாசலபதி மனுவில் கூறியுள்ளார்.

இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்து விவரங்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ.-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜராகினர்.

விசாரணையின் போது, நவாஸ்கனி தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள் தொடர்பான ஆவண நகல்களை வருமான வரித்துறை அதிகாரி சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்தார். சி.பி.ஐ. தரப்பிலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வாவணங்களை பாதுகாப்பாக வைத்திருந்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.