தமிழக பாஜ மேலிட பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல், நடப்பு தேர்தல் “மாற்றத்திற்கான தேர்தல்” என்றும் தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதியை தமிழக மக்கள் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறினார். மேலும், அவரது கருத்துக்களால் தமிழக மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் பெண்களை மதிக்காத ஒருவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் விமர்சித்தார்.
இதனால் திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் கூறினார். அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தலைமையில், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் நல்ல அரசு அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுரையில் ராம் சீனிவாசன் மிகவும் பிரபலமான ஆளுமை எனக் குறிப்பிட்ட கோயல், அவருக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைப்பதாகத் தான் அறிந்துள்ளதாக கூறினார். தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்ற தனது கருத்தை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.




