ஆசியா முழுவதும் விமான போக்குவரத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 1,400க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகை–புறப்பாடு தாமதமானது; 67 சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் வான்வெளியில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி, சிங்கப்பூர், துபாய், டோக்கியோ போன்ற பரபரப்பான விமான நிலையங்கள் செயல்பாட்டு திறன் குறைந்து திணறியதால், தாமதங்கள் அடுத்தடுத்த நகரங்களின் கால அட்டவணைகளுக்கும் பரவின.
இந்த குழப்பத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஈரான்–அமெரிக்கா போர் சூழலால் ஏற்பட்ட வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக பல சர்வதேச விமானங்கள் வழக்கமான பாதைகளை மாற்ற வேண்டியதாகி, பயண நேரமும் எரிபொருள் செலவும் உயர்ந்துள்ளது.
மேலும், கோடைகால பயண தேவை அதிகரித்துள்ள நிலையில் விமான நிலையங்களில் போதிய பணியாளர்கள் இல்லாதது விமானங்களின் தொடர் சுழற்சியை பாதித்துள்ளது. போர் சூழலால் எரிபொருள் விலை உயர்வதும் குறைந்த கட்டண விமான நிறுவனங்களுக்கு கூடுதல் சவாலாகியுள்ளது.
இந்தியாவில் டில்லி விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது; இங்கு 176 விமானங்கள் தாமதமடைந்தன. மும்பை, பெங்களூரிலும் இதே நிலை நீடித்த நிலையில், இண்டிகோவின் 93 விமானங்களும் ஏர் இந்தியாவின் 74 விமானங்களும் தாமதத்தை பதிவு செய்தன; மேலும் ஏர் இந்தியாவின் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.





