லோக்சபாவில் தென் மாநிலங்களின் குரல் “அழுத்தப்பட்டு, ஒடுக்கப்படும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொகுதி மறுவரையறையுடன் தொடர்புடைய வரைவு அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின் விளைவாக இருக்கலாம் என அவர் கூறினார்.

தன் அறிக்கையில், கடந்த ஒரு வாரமாகத் தெரிவித்து வந்த அச்சம் இப்போது உறுதியாகியுள்ளது என சிதம்பரம் தெரிவித்தார். தமிழகத்தின் தற்போதைய லோக்சபா இடங்கள் 39 என்றும், அது 58 ஆக உயரும் என்ற கூற்றை அவர் “மாயை” என விமர்சித்தார்.

தொகுதி மறுவரையறை நடைமுறைக்கு வந்தால் 58 ஆக உயர்வதற்குப் பதிலாக 46 ஆக குறையும் என அவர் கூறினார். அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போதைய 80 இடங்கள் முதலில் 120 ஆகவும், மறுவரையறைக்குப் பின் மேலும் 140 ஆகவும் உயரும் என அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3% என்றாலும், அது 20.7% ஆகக் குறையும் என அவர் கூறினார். இதைத் தடுக்கும் வகையில், வரைவு அரசியல் சாசன திருத்தச் சட்டத்தை ஒன்றிணைந்து எதிர்த்து தோற்கடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.