புதுடில்லி: திமுகவின் அணுகுமுறை காரணமாக தமிழகம் பல வாய்ப்புகளை இழக்க நேரிடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவை அவர் குறுகிய கண்ணோட்டம் கொண்டதாகவும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை உள்ளதாகவும் விமர்சித்தார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) வெளியிட்ட அறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செயல்படும் எதிர்க்கட்சிகள், லோக்சபாவிலும் சட்டசபையிலும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வாய்ப்பை தமிழகத்திடம் இருந்து பறித்ததாக இபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளதாக நிர்மலா குறிப்பிட்டார்.
மேலும், “கண்மூடித்தனமான வெறுப்புணர்வு” மாநிலத்தின் மொத்த வாய்ப்புகளையும் பெண்களின் வாய்ப்புகளையும் பாதித்ததாக அவர் கூறினார். திமுகவின் பிடிவாதம், தொலைநோக்கு பார்வையின்மை மற்றும் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை காரணமாக தமிழகம் பெறுவதற்குப் பதிலாக இழப்புகளை சந்திக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் உறுதியளித்த நன்மை பயக்கும் முன்முயற்சியில் இணைவதை திமுக மறுத்துவிட்டதாகவும், இத்தகைய முடிவுகள் மாநிலத்துக்கு நன்மையை விட இழப்பையே தரும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.





