தொகுதி மறுவரையறை என்ற பெயரில் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறும் “கருப்புச் சட்டத்திற்கு” எதிரான போராட்டம் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ மூலம் தெரிவித்தார். இந்த ஆபத்தை ஒரு வருடத்திற்கு முன்பே உணர்ந்து, அதற்கான பணிகளை அப்போதே தொடங்கியதாகவும் அவர் கூறினார்.
மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், கருப்புக் கொடி ஏற்றுதல் மற்றும் சட்ட நகலைக் கொளுத்துதல் போன்ற போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதன் மூலம் திமுகவின் உறுதியான நிலைப்பாடு வெளிப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த சட்ட முன்மொழிவை பார்லிமென்டில் தோற்கடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஸ்டாலின், முதன்மையாக தமிழக மக்கள் தன்னுடன் முழுமையாக நின்றதற்காக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார். பெண்களுக்கான இடஒதுக்கீடு என்ற பெயரில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முயன்றதாக கூறி, அதை எதிர்த்து முன்னணியில் நின்று தோற்கடித்தது பெண்களே எனவும் அவர்களுக்கு “சல்யூட்” எனவும் குறிப்பிட்டார்.
இண்டி கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சித் எம்பிக்கள் ஒன்றிணைந்ததாலேயே இது சாத்தியமானது என அவர் கூறி, இது பாஜவுக்கு நாடு முழுக்க வரவிருக்கும் தோல்விகளின் தொடக்கம் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அவரது அணியை கடுமையாக விமர்சித்து, தமிழக நலன்களுக்கு எதிராக நடந்ததாக குற்றம்சாட்டினார்.
இடஒதுக்கீட்டுக்காக முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குப் போராடியது, ஹிந்தித் திணிப்புக்கு எதிராக வென்றது போன்ற திமுக வரலாற்றை நினைவூட்டிய ஸ்டாலின், இப்போதும் தமிழகத்தின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை பாதுகாத்ததாக கூறினார். 2026 சட்டசபை தேர்தலில் பாஜவும் அதன் கூட்டாளிகளும் மறக்க முடியாத தோல்வியை சந்திப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.





