தற்போதைய லோக்சபா பலத்தின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் மகளிர் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர்.

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தோல்வியடைந்த நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு முந்தைய நாள் தொலைக்காட்சி உரையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ், தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் மசோதா தோல்வியடைந்ததாக கூறி, பெண்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து பா.ஜ. அலுவலகம் வரை மகளிர் காங்கிரசார் பேரணியாக சென்றனர். இந்த பேரணி டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.

பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், 2023ல் மசோதா நிறைவேற்றப்பட்ட போதே தற்போதைய லோக்சபா அமைப்பின் அடிப்படையில் அதை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியதாகவும், அந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், “30 மாதங்கள் மவுனம்” கழித்து அரசு ஏன் இப்போது முன்னெடுத்தது என்றும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் நிறைவேறாது என தெரிந்தும் அவசரமாக முயன்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

மொத்த எதிர்க்கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த நிலையில், மத்திய அரசு வேண்டுமென்றே அமல்படுத்துவதை தாமதப்படுத்துகிறது என அவர் குற்றம்சாட்டினார். பெண்களின் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், 543 தொகுதிகளுக்குள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.