தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகவும், ‘சோதனை’ என்ற பெயரில் தன்னை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சமூக வலைதள பதிவில், காங்கிரஸ் எம்பி ராகுல் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள சூழலில் இந்த நடவடிக்கை நடந்ததாக அவர் குறிப்பிட்டார். ஹிந்தி பேசும் அதிகாரிகள் மூலம் தன்னை ஸ்ரீபெரும்புதூர் சட்டசபைத் தொகுதி எல்லைக்குள் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தியதாகவும், பிரசாரத்திற்குச் செல்லவும் அரசியல் கடமைகளை செய்யவும் விடாமல் தடுத்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் அழுத்தத்திற்கான கருவிகளாக பயன்படுத்தப்படுவது கவலைக்குரியது என கூறிய அவர், அரசியல் உள்நோக்கத்துடன் நடந்ததாகக் கூறப்படும் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்தார். இதே குற்றச்சாட்டுகளை வீட்டுக்கு வெளியே நின்று ஊடகங்களிடமும் தெரிவித்தார்.
ஆனால் சில மணி நேரங்களிலேயே வருமான வரித்துறை இதை மறுத்தது. தாங்கள் எந்தச் சோதனையும் நடத்தவில்லை என்றும், செல்வப்பெருந்தகை கூறியது உண்மையல்ல என்றும் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.





