கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் தற்போதைய அரசுக்கு எதிரான மனநிலை உச்சத்தில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஒரு பேட்டியில் அவர், கடந்த தேர்தலிலும் இதே போக்கு இருந்ததாகக் கூறினார். ஆனால் அப்போது வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார். பல வாக்குச்சாவடிகள் சூறையாடப்பட்டதாகவும், பல கிராமங்களில் மக்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும், பாஜக தொண்டர்கள் வாக்களிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இம்முறை தேர்தலில் முதலில் வாக்காளர் பட்டியல் சுத்திகரிக்கப்பட்டதாகவும், போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஊடுருவல்காரர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறினார்.
நிர்வாகம், போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், முறைகேடுகளைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமித்ஷா கூறினார். இதனால் மக்களின் கோபம் சுதந்திரமாக வெளிப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.





