கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடந்த முதற்கட்ட தேர்தலில் பதிவான அதிகமான ஓட்டுகள், மாநிலத்தில் “காட்டாட்சி” முடிவுக்கு வந்து பா.ஜ.க. ஆட்சி அமையும் என்பதற்கான சுட்டிக்காட்டாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்.29 அன்று நடைபெற உள்ள நிலையில், டம் டம் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் அவர் பேசினார். மக்களின் பெரும் பங்கேற்பு ஜனநாயகத்தின் வெற்றியையும், தேர்தல் செயல்முறையின் மீது உள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது என்றார்.

இந்த அளவிலான ஓட்டுப்பதிவு எதிர்தரப்பினரை கவலையடையச் செய்துள்ளதாக கூறிய மோடி, இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாகவும், திரிணமுல் காங்கிரசின் ஆட்சிக்கு “சாவு மணி” ஒலிக்கத் தொடங்கியுள்ளதாகவும் விமர்சித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4க்கு பின் தற்போதைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மாநில மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு “அநீதி, அட்டூழியம்” தொடர்பான கோப்புகளும் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மே 4க்கு பின் திரிணமுல் காங்கிரசின் “குண்டர்கள்” சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது; அவர்களை காப்பாற்றவும் யாரும் இருக்க மாட்டார்கள் எனவும் மோடி எச்சரித்தார்.