இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் 27 அன்று கையெழுத்தாக உள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆக்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர் டாட் மெக்கிளே உடன் நீண்ட கலந்துரையாடல்கள் நடைபெற்ற பின்னர் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையில் உடன்பாடு முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை விரிவுபடுத்தும் என்றும், நியூசிலாந்துக்கான இந்திய ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 100% வரியின்றி அங்கு சென்றடைய வாய்ப்பு உருவாகும் என்றும் கோயல் தெரிவித்தார்.

மேலும், ஆக்ராவின் தோல் தொழில், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் கூறினார். இந்த பயணத்தின் போது பீயூஷ் கோயல்–சீமா கோயல் மற்றும் டாட் மெக்கிளே–நதீன் மெக்கிளே தம்பதிகள் தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை 2025 மார்சில் தொடங்கி, 2025 டிசம்பரில் நிறைவடைந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.