கொல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். முதல் கட்ட ஓட்டுப்பதிவில் திரிணமுல் காங்கிரசின் “ஆணவம்” தகர்ந்ததாக அவர் கூறினார்.

வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பன்கான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, இரண்டாம் கட்டத் தேர்தல் மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு தீர்க்கமான வெற்றியை உறுதி செய்யும் என தெரிவித்தார். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிலம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், மக்கள் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த மூன்று விஷயங்களிலும் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாக கூறிய அவர், பாஜவின் முன்னுரிமை விவசாயிகளின் நலன் என்றும், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இருவரின் கவலைகளையும் தாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளில் சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இரட்டிப்பாக்கப்பட்டதாகவும், சணல் கொள்முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் கோதுமை, அரிசிக்கு 100% சணல் பொட்டலங்களை கட்டாயப்படுத்தியதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்ததும் சணலுக்கான தேவையை உயர்த்தும் நடவடிக்கைகள் என விளக்கினார்.

இதனால் மேற்கு வங்க சணல் ஆலைகள் அதிகபட்ச ஆர்டர்களைப் பெறும் என்றும், ஆனால் திரிணமுல் காங்கிரசின் “சிண்டிகேட்” ஆலைகளை இயங்க விடவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மாநில விவசாயிகளின் நலனுக்காக திரிணமுல் அரசு விடைபெற வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்.