மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சாட்டர்ஜி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சனிக்கிழமை கடுமையாக கண்டித்தார்.

தேர்தலுக்குப் பிறகு இந்த கொலை நடந்ததாகக் குறிப்பிட்ட ராகுல், திரிணமுல் காங்கிரசுடன் தொடர்புடைய குண்டர்களே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினார். மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் ஜனநாயகம் செயல்படவில்லை; மாறாக “குண்டர் ஆட்சி” நிலவுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.

எதிர்ப்புக் குரல்களை அச்சுறுத்துதல், தாக்குதல், ஒடுக்குதல் ஆகியவை திரிணமுல் காங்கிரசின் அடையாளமாகிவிட்டதாக அவர் கூறினார். காங்கிரஸ் அரசியல் வன்முறையில் வேரூன்றியதில்லை; இனியும் அகிம்சை மற்றும் அரசியலமைப்புவாதப் பாதையிலேயே தொடரும் என்றும் தெரிவித்தார்.

குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய ராகுல், தேப்தீப்பின் குடும்பத்துக்கு முழுப் பாதுகாப்பும் இழப்பீடும் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். இந்தியாவின் அகிம்சைப் பாரம்பரியத்தை களங்கப்படுத்தும் அரசியலுக்கு தாம் தலைவணங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.