அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கு அவர்களின் திறமை மற்றும் அனுபவம் அவசரமாக தேவைப்படுவதாக அவர் கூறினார்.
தான் எழுதிய கடிதத்தில், பலர் பணமின்றி அமெரிக்காவுக்கு வந்தாலும் இந்தியாவின் தரமான கல்வி மற்றும் கலாசார பாரம்பரியம் அவர்களுக்கு பலமாக இருந்ததாகவும், அதனால் அவர்கள் பெரிய வெற்றியை அடைந்ததாகவும் குறிப்பிட்டார். அமெரிக்கா பல நல்ல வாய்ப்புகளை வழங்கியதால் நன்றியுணர்வு அவசியம் என்றும் அவர் எழுதினார்.
அதே நேரத்தில், கணிசமான அமெரிக்கர்கள் இந்தியர்கள் வேலைகளை பறிக்கிறார்கள் என நினைப்பதாகவும், இந்தியர்களின் வெற்றி நியாயமற்றது என கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வருங்கால அரசியல் போட்டிகள் தீவிர வலதுசாரி–அதிதீவிர இடதுசாரி மோதலாக மாறி, அதில் இந்தியர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் எனவும் எச்சரித்தார்.
உலகளவில் இந்தியர்களுக்கு கிடைக்கும் மதிப்பு இந்திய நாட்டின் நிலைப்பாட்டுடன் தொடர்புடையது என்றும், பல்வேறு தரப்புகளின் பரிதாபம் அல்லது இகழ்ச்சி போன்றவற்றை மரியாதை என தவறாக புரிந்துகொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார். இன்றைய உலகில் மரியாதை, செழிப்பு, பாதுகாப்பு ஆகியவை ஒரு நாட்டின் தொழில்நுட்பத் திறமையிலிருந்தே உருவாகிறது என்றார்.
இந்தத் திறமையை உருவாக்கும் அறிவுத்திறனை இந்தியா வளர்த்தாலும், அதன் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு ‘ஏற்றுமதி’ ஆகிவிடுவது வருத்தமளிப்பதாக அவர் எழுதினார். கடினமாக இருந்தாலும் தாயகம் திரும்பி, இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உயர்த்தவும், பெரிய இளைஞர் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தவும் வெளிநாட்டில் பெற்ற தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.




