கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பயங்கரவாத மையங்கள்” இனி நியாயமான தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று தெரிவித்தார்.

உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியை எஸ்சிஓ பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், பிராந்தியத்திலும் உலகளாவிய அளவிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான பொறுப்பு உறுப்புநாடுகளுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். வன்முறை, போர் ஆகியவற்றின் காலமாக மாற அனுமதிக்காமல், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டின் இறையாண்மையை குறிவைக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த கவனம் தளரக்கூடாது என்றும், பயங்கரவாதத்திற்கு தேசியமும் மதமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச விதிகளின் பாதுகாவலராக எஸ்சிஓ செயல்பட வேண்டும்; உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் நிலைப்பாட்டில் இரட்டை அணுகுமுறையை உறுப்புநாடுகள் கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அது ஒரு பிராந்தியத்தை மட்டும் அல்லாமல் மனிதநேயத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்தார். பயங்கரவாத மையங்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்ற இந்தியாவின் தீர்மானத்தை “ஆப்பரேஷன் சிந்தூர்” நடவடிக்கை வெளிப்படுத்தியதாகவும், பயங்கரவாதத்திற்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கி அதை அரங்கேற்றுபவர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்சிஓவில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தியா 2017ஆம் ஆண்டு முழுநேர உறுப்பினரானது.