குஜராத் மாநிலத்தில் வாகனங்கள் தொடர்ந்து நகரும் நிலையில் சுங்கக் கட்டணம் தானாக வசூலிக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் முதல்முறையாக நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் அல்லது குறிப்பிட்ட சாலைகளை பயன்படுத்துவதற்காக வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாலை அமைப்பு, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகளை ஈடுகட்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத் துறை அல்லது தனியார் நிறுவனங்கள் இந்த கட்டணத்தை வசூலிக்கின்றன.
இதுவரை பாஸ்டேக் மூலம் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் வழியாக வங்கி கணக்கிலிருந்து நேரடியாக கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்தது; இதனால் நீண்ட வரிசை காத்திருப்பு குறைந்தது. அடுத்த கட்டமாக, குஜராத்தின் சோர்யாசி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல் கடந்து செல்லும் வகையில் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முறையில் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் வாகனங்கள் கண்டறியப்பட்டு தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். குஜராத்தில் NH-48 நெடுஞ்சாலையில் இந்தியாவின் முதல் தடையற்ற (barrier-free) சுங்கக் கட்டண முறை தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.
இந்த முயற்சியின் நோக்கம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைத்தல், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தல், வாகன புகையை குறைத்தல் என்பதாகும். நாட்டின் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை டிஜிட்டல்மயமாக்கும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுவதாகவும் கட்கரி தெரிவித்தார்.





