மேற்கு வங்கத்தில் இன்று 15 ஓட்டுச்சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில், திரிணமுல் காங்கிரஸ் (திரிணமுல்) மற்றும் பாஜ ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி, அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தேர்தல் முறைகேடு குறித்த புகார்களைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் இரு தொகுதிகளில் மறு தேர்தல் நடத்தப்பட்டது. மக்ரஹட் பாஸ்சிம் தொகுதியில் 11 ஓட்டுச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 ஓட்டுச்சாவடிகளிலும் காலை முதல் வாக்குப்பதிவு நடந்தது.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மக்ரஹட் பாஸ்சிம் தொகுதியில் 56.33% மற்றும் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 54.9% வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பால்டா பகுதியில் திரிணமுல் தொண்டர்கள் தங்களை மிரட்டுவதாக கூறி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திரிணமுல் மற்றும் பாஜ தொண்டர்கள் இடையே மோதல் வெடித்து, அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

சில உள்ளூர் மக்கள், தாங்கள் திரிணமுலுக்கே வாக்களித்திருந்த போதும் தாக்கப்பட்டதாக கூறி, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பெண்களுக்கு பாதுகாப்பு தேவை என்றும் அவர்கள் தெரிவித்த நிலையில், சட்டம்-ஒழுங்கை பேண போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.