சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.

ஸ்டாலினின் ராஜினாமாவை கவர்னர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமைக்கும் வரை பதவியில் தொடருமாறு கவர்னர் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சமூக வலைதளப் பதிவில், நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு வாக்கையும் “விலைமதிப்பற்ற நம்பிக்கை” என அவர் குறிப்பிட்டார்.

கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், அதிக தொகுதிகளில் வென்ற கட்சி நம்மைவிட 17.43 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். வாக்குச் சதவீத வேறுபாடு 3.52 விழுக்காடு மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுப்போம்; எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களின் கோரிக்கைகளுக்காக போராடுவோம் என ஸ்டாலின் கூறினார். இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலைத் தொடர்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.