தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக)க்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. அந்தக் கட்சிகளுக்கு சேர்த்து இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதரவு குறித்து முடிவு எடுக்கும் முன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் ஐந்து பேருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், வரும் லோக்சபா மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும் என காங்கிரஸ் தலைமை தெரிவித்தது. இதன் மூலம் 2016 முதல் திமுகவுடன் நீடித்த காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





