சென்னை: தவெக அரசு அமைப்பதற்கான முயற்சிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தெரிவித்துள்ளது. திமுக எடுத்துள்ள நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என்றும் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸைத் தவிர மற்ற கட்சிகள் இன்னும் தங்களின் முடிவை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், முதல்வராக பொறுப்பேற்க தவெக தலைவர் விஜய்க்கு சிக்கல் உருவாகியுள்ளது. ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்கள் கிடைத்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று கவர்னர் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் பதிலை தவெக எதிர்பார்த்து வந்தது. இந்நிலையில், இரண்டு எம்எல்ஏக்கள் கொண்ட ஐயுஎம்எல் ஆதரவு கோரிக்கையை நிராகரித்துள்ளது.

திமுகவுடன் உள்ள கொள்கை கூட்டணி எப்போதும் தொடரும் என்றும் கட்சி தெரிவித்தது. என்டிஏ கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் முழு ஆதரவை அறிவித்திருந்த நிலையில், ஐயுஎம்எல் மறுப்பு தவெகவுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.