மே 8-ம் தேதி மாலை ஒடிஷா வான்பரப்பில் வால்நட்சத்திரம் போன்ற பிரகாசமான ஒளி தென்பட்டது. இதனால் பொதுமக்களிடையே வியப்பும் கேள்விகளும் எழுந்தன.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், அந்த பொருள் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறப் புகைத் தடங்களை வெளியேற்றியபடி வேகமாகச் சென்றது. இந்த காட்சி ஒடிஷாவைத் தாண்டி வங்கதேசம் வரை தெரிந்ததாகவும் பலர் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், இது எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ‘அக்னி’ ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்குச் சம்பந்தப்பட்டது என தெரிவித்தது. சோதனை ஒடிஷாவின் சண்டிப்பூர் அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து நடத்தப்பட்டது.

எம்.ஐ.ஆர்.வி. (Multiple Independently Targetable Re-entry Vehicle) தொழில்நுட்பம் என்பது ஒரே ஏவுகணை மூலம் பல்வேறு இலக்குகளைத் தாக்கும் திறனை வழங்கும் என அமைச்சகம் கூறியது. சோதனையின் போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பல இலக்குகளை நோக்கி ஏவுகணை செலுத்தப்பட்டு, அனைத்தும் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சோதனை வெற்றியடைந்ததையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ. (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மற்றும் ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.