சென்னையில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), கட்சி உடைகிறது என்ற தகவல்களை ‘தவறான செய்தி’ என்று திட்டவட்டமாக மறுத்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. தேர்தல் காலத்தில் இபிஎஸ் எடுத்த சில முடிவுகளே தோல்விக்குக் காரணம் எனக் கூறி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தரப்பு குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வந்தன.
இரு தரப்பினருடன் தொடர்புடைய எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு தனித்தனியாக வந்ததாகவும், இது கட்சிக்குள் நிலவும் பதற்றத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறப்பட்டது.
மேலும், நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரில், அதிமுக எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக இபிஎஸை தேர்வு செய்ய 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து தற்காலிக சபாநாயகருக்கும் பேரவைச் செயலாளருக்கும் கடிதம் அளித்ததாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் சட்டசபையிலிருந்து வெளியே வந்த இபிஎஸிடம் நிருபர்கள் கட்சியில் என்ன நடக்கிறது, கட்சி உடைந்துவிட்டதாக தகவல்கள் வருகிறதே எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘தவறான செய்தி’ என்று கூறியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.





