திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் ஏற்றப்பட்டிருந்த கொடியை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

திருப்பரங்குன்றம் போலீசார் பதிவு செய்த வழக்கில், அரசு முன் அனுமதியின்றி சிலர் கூடினர், கோஷங்கள் எழுப்பினர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவலிங்கம் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கவுரி, குற்றச்சாட்டுகள் எந்தக் குற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றும், யாரையும் செல்லவிடாமல் தடுத்தது அல்லது போக்குவரத்திற்கு இடையூறு செய்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு தேவையான குறிப்பிட்ட விவரங்கள் இல்லையெனவும் குறிப்பிட்டார்.

மக்களுக்கு பாதிப்பு, இடையூறு அல்லது ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு இல்லாத நிலையில், வெறும் கோஷங்கள் எழுப்புவதையோ அல்லது ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதையோ தொந்தரவாகக் கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியாக ஒன்றுகூடும் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்கள் என்றும், சட்ட மீறல் இல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகள் மூலம் போராட்டங்களை ஒடுக்க முடியாது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

இவ்வழக்கு ஒரு பொதுவான ஆர்ப்பாட்டத்தை மட்டுமே காட்டுகிறது; குற்றச் செயலை அல்ல என்றும், சரியான ஆய்வு இன்றி இயந்திரத்தனமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.