தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுகவும் தவெகவும் மிகக் குறுகிய காலத்திலேயே “ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்” என்பதை மக்கள் முன் நிரூபித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டசபையில் சனாதன ஹிந்து தர்மத்தை “ஒழிப்பது” குறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி பேசிய சில நாட்களிலேயே, அந்த கருத்துகளுக்கு ஆதரவாக தவெக எம்எல்ஏ முஸ்தபா கருத்து தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இது “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என கூறிய அண்ணாமலை, இதன் மூலம் தர்மத்தின் மீது அவர்கள் மனதில் வளர்த்துள்ள வெறுப்பு வெளிப்படுகிறது என்றும் தெரிவித்தார். சனாதன ஹிந்து தர்மத்தின் மீது தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் திமுகவை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளன என்பதை அது மறந்துவிட்டதாகவும், தவெகவும் விரைவில் அதை உணரும் என்றும் அவர் கூறினார்.

மேலும், திமுகவோ தவெகவோ தங்கள் கொள்கையில் துணிச்சலுடன் உறுதியாக இருந்திருந்தால், தேர்தல் பிரசாரத்திலேயே சனாதன ஹிந்து தர்மத்தை இலக்காக்கொள்வதே தங்கள் அரசியலின் மையம் என்று வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும் என்றார். அதற்கு மாறாக, மதச்சார்பின்மை மற்றும் “நாடகத்தன்மை” பின்னால் ஒளிந்துகொண்டதாகவும் விமர்சித்தார்.

அதே நேரத்தில், மக்களின் நம்பிக்கையை அவமதித்தபடியே அவர்களிடமிருந்து ஓட்டுகளை பெற்ற பின்னரே உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சனாதன ஹிந்து தர்மம் “பஞ்சிங் பேக்” அல்ல என்றும், இத்தகைய கருத்துகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.